Tuesday, October 13, 2015

☞ சைவத்தில் நவராத்திரி விரதம்



சோமவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி முதலியன மாதந்தோறும் வரும் விரதநாட்கள்.  சிவராத்திரி, நவராத்திரி, கேதாரகௌரி, திருவாதிரை, ஸ்கந்தசஷ்டி, விநாயகசதுர்த்தி முதலியன வருடந்தோறும் வரும் விரததினங்கள்.  உபவாச மிருந்து அவ்விரதங்களை விதிப்படி அனுட்டிக்க வேண்டும்.  அதனால் சைவமக்களிடம் மனிதவியல் நிலைக்கும்; சிவபத்தி வளரும்.  அவை சமயத்துறை பற்றிய இலாபம்.  இலெளகிக இலாபம் வேறு.  என்னை? உபவாசத்தால் சைவர் வீடு ஒவ்வொன்றிலும் உணவிற்காம் பண்டங்களிற் பெரும் பகுதி சேமிக்கப்படும்.  இந்நாட்டிலுள்ள சைவமக்களின் வீடுகளைச் சேரக் கணக்கிடுக.  மிஞ்சும் பண்டம் கொஞ்சமாகவாவிருக்கும்? பணமில்லாச் சைவரும் உபவாசம் இருக்கவேண்டியவரே.  இருந்தால் அவர் உண்ணும் நாட்கள் சுருங்கும்.  அப்பண்டங்களில் மிச்சம், இவ்வுண்ணுநாட்களின் சுருக்கம் ஆகியவற்றை ஓராண்டிற்குச் சேர்த்துக் கணக்குப் பார்க்கவேண்டும்.  நாட்டில் உணவுப்பஞ்சம் எவ்வளவோ குறையும்.  இதுவே இலெளகிக லாபம்.  சைவர் இதைக் கருதுவதில்லை.  உபவாசம் மறைகிறது, பரிகசிக்கப்படுகிறது.  ஒருசைவன் ஒருநாளில் பல தடவைகள் உண்கிறான், ஒவ்வொரு வேளையும் அதிகம் உண்கிறான்.  மனிதவியலுக்கு மாறாக உண்ணத்தகாத வற்றையெல்லாம் உண்கிறான்.  கண்ட விடங்களில் உண்கிறான்.  நாக்கை மகிழ்விக்கவும் வயிற்றை நிரப்பவுமே அவன் பிறந்தான் போலும்உபவாசத்தால் உயிருக்கு உறுதியுண்டு.  தேகமும் சுகமுறும்.  அதைப் பழித்த பாவம் நிர்ப்பந்தமான பட்டினிக்கிடக்கையைக் கொணர்ந்தது.  அதனால் உடலுயிர்களுக்குத் துன்பமே பலன்.  ஆகலின் நாட்டின் நலனைக் கருதியாயினும் சைவர் தம் சமய தருமமாகிய உபவாசத்தை மேற் கொள்வாராக.

இன்னொன்று, சைவத்தில் சமயானுட்டானங்களத்தனையும் உபவாசத்தோடு கூடியவை.  அவற்றில் கொண்டாட்டத்திற்கு சம்பந்தமில்லை.  தீபாவளி, தைப்பொங்கல் என இரண்டு பண்டிகைகளுள.  அவையும் சைவசமூகத்திற் புகுந்தன.  புகத்தொடங்கிய காலந் தெரியவில்லை.  பண்டிகையென்னுஞ் சொல்லுக்குப் பொருள் எதுவோ? அச்சொல் தமிழன்று; சம்ஸ்கிருதமாகவுந் தெரியவில்லை.  தீபாவளி வைணவ சம்பந்தமுடையது; உண்டாடுக் களியாட்டு மிகுந்தது.  சைவர் அதை ஆசரிக்க வேண்டுமா? ஆமென்பதற்குச் சைவநூற் பிரமாணமுண்டா? தைப்பொங்கலுக்கு மகரசங்கிராந்தி யென்று பெயர். அதுவும் உபவாசத்தோடு கூடியதே.  சைவரிடம் தம் சமயக் கற்புக் குலைந்தது.  சமயக் கலவை புகுந்தது. அதன் விளைவே அப்பண்டிகைக் கொண்டாட்டம்.  நான் ஒரு சைவன்.  எனக்கு சமயவழி என் சமயத்தாரிடம் தொடர்புண்டு.  அவரெல்லாம் சைவசமய வரம்பைப் பல்லாற்றானும் போற்றிக் கொள்ள வேண்டும்; அச்சமய ஆசார அனுட்டானபரராக வேண்டும்; நாட்டுக்கு நல்ல சேவகராக வேண்டும்; சிவபிரான் திருவருளுக்குப் பாத்திரராக வேண்டும். அவ்வாசைபற்றி யெழுந்தனவே மேலுள்ள வசனங்கள்.  உபவாச வகைகளைக் கொண்ட பிற சமயங்களு மிருக்கலாம்.  அச்சமயிகளும் குறையின்றி அவற்றை யாசரிப்பாராக.

சிவராத்திரிபோல் நவராத்திரியும் தேசமெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.  அது உமாதேவியார்க்குரிய விரதம்.  அவ்வுண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?  உண்மைகண்டு அனுட்டிக்கப்படாத விரதம் அற்பப்பயனுடையதே.  ஆகலின் அதனை யனுட்டித்தற் குரியார் அதன் உண்மையைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.  பெயரளவில் அனுட்டிப்பவர் ஏமாற்றமடைவர்.  அவ்விரதத்தில் அன்னிய சமயக் கருத்துப் புகுத்தப்பட்டு விடும்.  அப்படித் தான் நவராத்திரி விரதம் இருந்து வருகிறது.  அவ்விரத வுண்மையைச் சைவப் பிரமாண நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுவோர் இன்றும் உளர்.  ஆனால் அதை ஏற்க விரும்பாத மனம் படைத்த சைவர் பலராய்விட்டனர்.  அநியாயம்.  யாரிட்ட சாபமோ அது! அல்லது கலிக்கொடுமை தானோ! 'ஆரியக் கூத்தாடினாலுங் காரியத்திற் கண் வேண்டும்' என்பது பழமொழி. அன்னிய சமயத்தவர் நம்மோடு நெருங்கி உறவாடுவர்.  ஆயினும் தம் சமயத்திற்றான் அவர்க்குக் கண்.  அதனொடு தமக்குள்ள தொடர்பை அவர் தளர்த்திக் கொள்ளவே மாட்டார்.  சைவருட்டான் பலர் அவருக்கு மாறாகவே யிருக்கின்றனர்.  அவர் சீர்ப்பட வேண்டும்.  நானும் பெரியோ ரடிச்சுவடு பற்றி ஊதுகிற சங்கை ஊதுகிறேன்.  விடிகிறபோது விடியட்டும்.  என்றாவது விடியாமலா போகும்? பார்க்கலாம்.


நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவுகள் என்று பொருள்.  'நவராத்திரி உத்ஸவத்திற்கும் விஜயதசமி உற்சவத்திற்கும் சம்பந்த மேதேனு முண்டா? இன்றா?' என ஒருவர் கேட்டிருக்கிறார்.  பிரமாண சகிதம் அதற்கு விடை வேண்டும்.  அதுவரை தசரா என்ற பெயரை விலக்கி வைப்பதே தக்கது. தசரா - பத்து இரவுகள்.

முதலாவது, நவராத்திரிக்குரிய காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். 'சிவோத்சவங்களுக்கெல்லாம் தீர்த்தத்தை நிச்சயம் செய்து கொண்டு ஆரம்பத்தைச் செய்ய வேண்டும்.  இந்த உத்ஸவத்துக்கு ஆரம்பம் முக்கியமென்று வாக்கியங்கள் மூலம் தெளிவாகிறது' என்கிறார் பிரமஸ்ரீ தெய்வசிகாமணிப் பட்டர். மானாமதுரை.  இந்த உத்ஸவம் என்றது நவராத்திரியை.

'நவராத்திரி உற்சவத்திற்கு ஆரம்ப காலம் நிச்சயித்திருப்பதுபோல மகோற்சவத்திற்கு ஆரம்பம் சொல்லப்படாமல் உற்சவம் முடிவாக வேண்டிய நக்ஷத்திரம் திதி முதலிய காலமே சொல்லப்பட்டிருக்கிறது' என்கிறார் திரு. தி.க. உலகநாத பிள்ளை, திருநெல்வேலி வைதிக சைவ சம்மேளன அமைச்சர்.  ஆகவே நவராத்திரி விஷயத்தில் சிவாலயத்தில் ஒன்பது நாளுமே முக்கியமாத லறிக.  சிவாகமம் அவ்விரத காலத்தைச் சாந்திரமானப் படியே நிச்சயித்துள்ளது.  விநாயக சதுர்த்தி பாத்திரபத (சாந்திரமான புரட்டாதி) மாதத்திலும், நவராத்திரி ஆச்வீஜ (சாந்திரமான ஐப்பசி) மாதத்திலும், ஸ்கந்தசஷ்டி கார்த்தீக (சாந்திரமான கார்த்திகை) மாதத்திலும் அனுட்டிக்க வேண்டும் என்பது சிவாகமவிதி.

'நாம் அறிந்த அளவில் ஸ்ரீ காரணாகமத்தில் நவராத்திரி விதிப்படலத்தில், 'ஆச்வயுக் சுக்ல பக்ஷேது ப்ரதிபந் நவம் யந்தகே! ப்ரதிபத்தின மாரப்ய வ்ரதோத் ஸவம தாசரேத்!' என்று சொல்லப்பட்டிருகிறபடி ஆச்வீஜ (சாந்திரமான ஐப்பசி) மாதத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமையில் நவராத்திரி விரதோற்சவத்தை ஆரம்பித்து க்ஷ - நவமியில் முடிப்பதே முன்னோர் அனுஷ்டானத்திற்கும், சிவாகமங்கட்கும் பொருத்தமானதென்று தீர்மானிக்கின்றோம்" என்கிறார் திரு. தி.க. உலகநாத பிள்ளை.

இனி அவ்விரதத்தின் கருத்தைக் காணலாம்:  சிவபிரானுடைய அருட்சத்தியே உமாதேவி.  அச்சத்தியும் ஒன்றே.  ஆயினும் அது பலதொழில்களை யியற்றும்.  நெருப்புக்குச் சத்தியொன்றே.  அது தான் சூடு.  ஆயினும் அது வறுக்கும், பொரிக்கும், அவிக்கும், நீற்றும், உருக்கும், பொசுக்கும்.  அத்தனை பெயர்களை அது ஏற்கின்றது.  அப்படியே அச்சிவசத்தியும் பல பெயர்களைப் பெறும்.  அது சிருட்டிக்கிறது.  திதிக்கிறது, சங்கரிக்கிறது.  சிருட்டிக்கும்போது அதற்குச் ஜனனியென்று பெயர்.  திதிக்கும்போது அது ரோதயித்திரியாம்.  சங்காரத்தில் அது ஆரணியெனப்படும். 

பிரமன் சிருட்டிக்கிறான், விட்டுணு திதிக்கிறான், உருத்திரன் சங்கரிக்கிறான் என்றால் அத்தொழில்கள் அவர்களுக்குச் சொந்தமல்ல.  அவர்கள் தோன்றி மறைபவர்கள்.  ஒரு பிரமன் போனால் அப்பதவிக்கு இன்னொருவன் வந்து பிரமனாவன்.  அப்படியே விஷ்ணு முதலியோருக்குமாம்.  மேலும் அண்டந் தோறுமாகப் பிரமர் பலர் உளர்.  விஷ்ணு முதலியோரும் அங்ஙனமே.  ஆகலின் அவர்களைக் கணக்கிற் சேர்க்கக்கூடாது.  அப்பிரமரனைவரையும் அதிட்டித்துள்ள சிருட்டிசத்தியவ் ஜனனி யொன்றுதான், அவ்விட்டுணுக்களனைவரையும் அதிட்டித்துள்ள திதிசத்தி அந்தரோதயித்திரி யொன்று தான்.  அவ்வுருத்திரரனைவரையும் அதிட்டித்துள்ள சங்காரசத்தி அவ்வாரணி யொன்றுதான்.  அம்மூன்று சத்திகளும் சிவசத்தியின் வியாபார பேதங்களே, வியாபாரம் - தொழில். 
ஆரணி சத்தியை முதல் மூன்று தினங்களிலும், ரோதயித்திரி சத்தியை அடுத்த மூன்று தினங்களிலும், ஜனனிசத்தியைப் பின்மூன்று தினங்களிலும் வழிபட வேண்டும்.  அதற்கு வாய்ப்பில்லாதவர் ஒன்பதாந் தினமாகிய நவமியன்று அம்முச் சத்திகளின் மூலமாகிய சிவசத்தியை அதாவது உமாதேவியாரை கலச ஸ்தாபனஞ் செய்து உபவாசமிருந்து வழிபடவேண்டும்.  அதுபற்றியே அத்தினம் மஹாநவமியெனச் சிறப்பித்துக் கூறப்பட்டது.

'பெருகு காதலிற் புரட்டைமுற் பிரதமை முதலாப்
மருவி முன்புகல் விதிமுறை மணிக்குட மமைத்துச்
சொரிந றுந்துண ரருச்சனை வரன்முறை தொகுத்துப்
பரிவி னெண்பகற் பலாதியுண் டருண்முறை பயில்வார்,'

'நடந்த நாள்கழித் தீற்றிடை யெதிர்ந்தமா நவமி
தொடங்கு பிற்றைநாண் மறையவர்ப் போசனந் தொகுத்து
வடங்கொள் பூண்முலை மறையவர் மடந்தையர்க் கினிது
நுடங்கு கோசிக மளித்தபின் பாரண நுகர்வார்'
என்ற உபதேசகாண்டத்தால் அவ்விரதம் அனுட்டிக்கு முறை அறியப்படும்.

'சேந்த தாமரைத் தடங்கணா னத்திற நோற்று
மோந்த போர்முகத் தசுரரை முதலற முருக்கி
வாய்ந்த னன்கலா சத்தியை யடைந்தனன் மற்றோர்
பூந்த டங்கணோர் பாக்கிய சத்தியும் புரிந்தான்',

'இமய மீன்றெடுந் தளித்தவள் விரதமீ திழைத்தோ
ரமைய நல்கிய பெருவளந் துய்த்தன ராகி
யுமைத ரும்பெருங் கருணையா லருங்கதி யுவந்தார்
தமையெ டுத்தெடுத் துணர்த்துவ தியாருழைத் தகுமே'
என்ற அந்நூற் பாடல்கள் அவ்விரத மனுட்டித்தவர் பெற்ற பேறுகளை எடுத்துரைக்கின்றன.

இக்காலை அவ்விரதம் சாத்திரத்துக்குப் பொருந்த அனுட்டிக்கப்பட்டு வருவதாகத் தெரியவில்லை.  மேலே சொல்லப்பட்ட ஜனனியைச் சரசுவதி யெனவும், ரோதயித்திரியை இலக்குமியெனவும், ஆரணியை உமையெனவுஞ் சொல்வதுண்டு.  அங்ஙனமாயின் பிரமாவை அதிட்டிக்கிற சரசுவதி வேறு, அவருக்கு மனைவியாகிய சரசுவதி வேறு; விட்டுணுவை அதிட்டிக்கிற இலக்குமி வேறு, அவருக்கு மனைவியாகிய இலக்குமி வேறு; உருத்திரனை அதிட்டிக்கிற உமை வேறு, அவருக்கு மனைவியாகிய் உமை வேறு என்பது பெறப்படும்.  அப்பிரமனாதியோரை அதிட்டிக்கிற சரசுவதி, இலக்குமிம் உமை யென்போரைக் குறித்தது நவராத்திரி விசேடம் என்றால் அது பொருந்தும்.  இம்மும்மூர்த்திகளுட்பட்ட உருத்திரன் அவருக்கு மனைவியாகிய உமை என்பார்க்கு அம்மும்மூர்த்திகளின் தலைவராய சதுர்த்தப் பொருளாயும் சைவசமய தெய்வமாயும் உள்ள சிவபிரான் உமாதேவியார் வேறாவார்.  சிவராத்திரி விரதம் அச்சிவபிரானுக்கும், நவராத்திரி விரதம் அவ்வுமாதேவியார்க்குமே உரியன.  ஆனால் அம்மும்மூர்த்திகளின் மனைவிமாராகிய சரசுவதி முதலியோருக்குரியது அவ்விரதம் என்கிறார் சிலர்.  அது சரியன்று.  அவ்விரதத்தை அப்பிரம விட்டுணு வாதியரே அனுட்டித்ததால் அஃது அறியப்படும்.  அன்றியும் தக்க யாகத்தில் வீரபத்திரமூர்த்தியால் அச்சரசுவதியின் (பிரம்மாவின் மனைவி) மூக்கு அறுக்கப்பட்டது.  அவ்விலக்குமிக்குந் (விட்டுணுவின் மனைவி) தண்டனை கிடைத்தது, அங்ஙனம் பங்கப்பட்ட அத்தேவ ஸ்திரீகளைக் குறித்த விரதமாக அதனைக் கொள்வது பாவம்.  இனியாயினும் அன்ன ஆபாசக் கருத்துக்களைத் தள்ளுக.  ஸ்ரீ உமாதேவியாருக்குரியதே நவராத்திரி விரதமென்பதைக் கடைப்பிடிப்பதே உசிதம்.  சைவர் அது செய்து நலம் பெறுவாராக.

முடிப்புரை
யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரை அறியாத சைவர் வெகு சிலரே.  அந்நாவலர் சைவ சமய ஆராய்ச்சி, அறிவு, ஆண்மை மிக்கவர்.  'சைவ வினா விடை' என இரண்டு நூல் அவரெழுதியிருக்கிறார்.  அவை அருமை பெருமையுடையன; ஒவ்வொரு சைவரும் ஊன்றிக் கற்றற்குரியன.  இரண்டாஞ் சைவ வினா விடையில் விரதவியல் என்றொரு பகுதியுண்டு.  அதிற் சைவ விரதங்களைத் தொகுத்தும், அவற்றை அனுட்டிக்கு முறைகளைச் சுருக்கியும் நன்கு கூறபட்டுள்ளன.  அவ்விரதங்களை அம்முறையில் அனுட்டிப்பதே சைவர்க்கு நெறி.  மாறானவற்றை விடுவதும் நெறிதான்.  அந்நூலிற் சொல்லப்படாத சில விரதங்களையும் நம்மவர் அனுட்டித்து வருகின்றனர்.  அவையும் பிரமாணமுடைவாயின் சரி தான்.

ஏகாதசி யென்றொரு விரதமுண்டு.  அதை வைணவரும் அனுட்டிப்பர், சைவரும் அனுட்டிப்பர்.  அவ்விரத விவரம் வைணவருக்கு ஒருவிதம், சைவருக்கு ஒரு விதம்.  இன்று வரை வைணவர் தம் சமயப் பாங்கில் அனுட்டிப்பாராயினர்.  சைவரும் தம் சமய நீதியிலன்றோ அனுட்டிக்க வேண்டும்.  அந்தோ! அவருட் சிலரோ பலரோ அன்று மாத்திரம் ஊர்த்துவபுண்டரம் அதாவது நாமம் போட்டுக் கொள்கின்றனர், வைகுண்ட யாத்திரையுஞ் செய்கின்றனர்.  தன்மானமென்பது அதுதான் போலும்.  அது சைவ விரதமாதலெப்படிதிருப்பாற்கடலைக் கடைந்தனர் பிரம விஷ்ணுவாதி தேவர்களும், அசுரர்களும், அதிலிருந்து எழுந்தது ஆலகால மென்னுங் கொடுவிடம்.  அவ்விட வெப்பத்தால் அப்பிரம விஷ்ணுவாதி சகலரும் பொசுங்கினர், கருகினர்.  உலகமே நடுங்கி விட்டது.  தேவரனைவரும் கயிலைக்கு ஓடிச் சென்று சிவபிரானிடம் சரண் புகுந்தனர்.  திருவுளம் இரங்கியது அப்பெருமானார்க்கு.  அவ்விடத்தைக் கொணர்வித்து வாங்கி உண்டு தம் படிகநிறமான கண்டத்தில் நிறுத்தி அவ்வனைவரையுங் காத்தருளினார் அவர்.  அந்நஞ்சையுண்ட காலம் ஏகாதசி.  திருநீலகண்டரின் திருவருள் பெற்றனர் அத்தேவர்.  அவர் மறுநாள் துவாதசியில் அக்கடலைக் கடைந்தபோது அமுதமெழுந்தது.  விடத்தைத் தாம் உண்டு அமுதத்தைத் தேவர்க்கீந்த காரணத்தால் அச்சிவ பரம்பொருள் அத்தேவரெல்லாராலும் திரயோதசியன்று உபாசிக்கப்பட்டனர்.  அங்ஙனம் சிவபிரான் ஆலாலமுண்டு தேவரைக் காத்தருளிய தினம் ஏகாதசி யாதலால் அத்தினம் சைவர்க்கு விரததின மாயிற்று.  அச்சரித்திரத்தை மறந்து அவ்விரதத்தைச் சைவர் அனுட்டித்தல் பரிதாபம்.  அவர் பரிகசிக்கவும் படுவர்.

'ஏகா தசியின் மாலைதனி லெல்லாம் வல்ல வெம்பெருமான்
ஆகா வாலா கலவிடத்தை யருந்தி யமார்க் காத்தனர்பின்
வாகா வீரா றாந்திதியின் வாரி யமிழ்த மெழவானோர்
ஏகா துண்டு பதின்மூன்றா வெண்ணுந் திதிசா யும்போழ்தில்,'

'அரனார் சபரி மரபுளியே யாற்றி வணங்கிப் போற்றினர் முப்
புரனார் பகைவ ரல்வேல்வை போத விடைமே னின்றருளி
வரனா ரருளை வழங்கினரால்---'
என்ற சிவாலய தரிசனவிதிப் பாடல்களில் மேற்காட்டிய உண்மை புலனாம்.  சபரி - பூசை. 
ஆகவே சைவமக்கள் இனியாயினும் சிவாகம பண்டிதர்களை நாடுக.  அவர்களைக் கொண்டு சைவ விரதங்களையும், அனுட்டான முறைகளையும் சிவாகமப் பிரமாண சகிதம் ஆராய்ச்சி முறையில் எழுதுவித்து வாங்குக.  அதனை அச்சிட்டுப் பரப்புக.  சிறந்த சைவ சேவையாகும் அது.


சொன்னேன் அதுவே சுகம்,

சுபம்

No comments:

Post a Comment