Tuesday, September 8, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 4


பத்து காரியங்கள்

1. முன்னைய சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 3 இன் முடிவில் குறிப்பட்ட புருஷதத்துவமான ஆன்மாவிற்கு சுகதுக்கங்களை அனுபவிப்பதற்குச் சாதனமாகத் திகழும் தத்துவங்கள் எவையெனில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்கள்; இவற்றிற்குக்  காரணமான தன்மாத்திரைகள் யாவை எனில் கந்தம், இரசம், ரூபம், பரிசம் மற்றும் சப்தம் என்பனவாகும்.

பத்து கரணங்கள்

2. வாக்கு,பாதம்,கை,கழிவாய் மற்றும் கருவாய் ஆகிய ஐந்து தொழிற் புலன்கள்(கன்மேந்திரியங்கள்). இவற்றின் தொழில்களாவன: பேசுதல்,நடத்தல்,எடுத்தல்,கழிவகற்றல்,ஆனந்தமடைதல்.

3. செவி,தோல்,கண்,நாக்கு,மூக்கு ஆகிய ஐந்து அறிவுப் புலன்கள்(ஞானேந்திரியங்கள்). இவற்றின் தொழில்களாவன: ஓலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை, நாற்றம் ஆகியவற்றை அறிதல்.

4. எனவே வாக்கு முதலிய கன்மேந்திரியங்கள் ஐந்தும், செவி முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து கரணங்கள்---புருஷதத்துவமான ஆன்மாவின் அறிவுக்கும் தொழிற்படுத்துவதற்கும் துணை புரியும் கருவிகளாகத்திகழ்கின்றன.

மூன்று அந்தக்கரணங்கள்

1. மனம்,அஹங்காரம்,புத்தி ஆகிய மூன்றும் இப்பருவுடலினின்றும் வெளியில் சென்று அறிந்து கொள்ளும் செவி முதலிய ஞானேந்திரியங்களைப் போலல்லாமல் எல்லாத் தொழிலுக்கும் இருப்பிடமான இவ்வுடலின் உள்ளே நின்று[இந்திரியங்களைத்] அவ்வவற்றின் தொழிலைச் செய்யுமாறு தூண்டுகின்றன. ஆகையால் இவை அந்தக்கரணம்-உட்கருவி என அழைக்கப்படுகின்றன.

2. மனத்தின் செயலானது[யாதேனும் ஒன்றை அறியுமாறோ அல்லது ஒரு செயலைச் செய்யுமாறோ]விழைதல் மற்றும் செவி முதலிய ஞானேந்திரியங்களைத் தொழிற்படுத்துதல்; நான் என்னும் உணர்வு மற்றும் பிராணவாயு முதலியவற்றை தொழிற்படுத்துதல் அஹங்காரத்தின் செயல்; ஐயந்திரிபற ஒரு செய்தியை அறிவது புத்தியின் செயல். அது எவ்வாறெனின், எடுத்துக்காட்டாக, இது வெள்ளியே சிப்பியல்ல என உறுதியாக அறிவது.

இவ்வாறாக[பத்து காரியங்கள் , பத்து கருவிகள், மூன்று உட்கருவிகள் அடங்கிய] இருபத்திமூன்று தத்துவங்கள் கூறப்பட்டன.மேலும்  தத்துவங்கள் காட்டப்படும்...

சுபம்