Tuesday, October 6, 2015

☞சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 6


• மிசிராத்துவா

♋இருபத்தியைந்து தத்துவங்களுக்கு மேலாக உள்ளது ராகம் என்னும் தத்துவம்; இதன் தொழிலாவது பிரகிருதியினின்றும் தோன்றும் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆன்மாவிற்கு விருப்பம் உண்டாக்குவது.

♋ ராக தத்துவத்திற்கு மேலாக இருப்பது நியதி தத்துவம்; அந்தந்த ஆன்மாவினால் செய்யப்படும் செயல்களின் பலனை அந்தந்த ஆன்மாவே நுகரவேண்டும் என்று நெறிப்படுத்துவதே இதன் தொழில்.

♋ இதற்கு மேல் கால தத்துவம்; புருஷன் என அழைக்கப்படும் ஆன்மாவானது மிக நீண்டகாலம் அனுபவிக்கிறது அல்லது குறைந்த காலம் அனுபவிக்கிறது எனப் புருஷதத்துவத்தின் போக நுகர்ச்சியை அளவிடுவது இதன் தொழில்.

♋ இதற்கு மேல் வித்யா தத்துவம்; இதன் தொழிலாவது அந்தந்தப் பொருள்களின் உருவத்தைக் கொள்ளும் புத்தியினை ஆன்மா பற்றும் படி செய்வது.

♋இதற்கு மேல் உள்ளது கலாதத்துவம்; இதன் தொழில் தாமிரத்தில் படியும் களிம்பு போல் ஆன்மாவின் இயல்பான ஞான சக்தியினை முழுவதும் மறைத்து நிற்கும் சகஜமலமென்றழைக்கப்படும் ஆணவமலத்தைச் சிறிது விளக்கி ஆன்மாவின் உண்மைச் சொரூபம் சிறிது வெளிப்படும் படி செய்தல்.இக் கால தத்துவத்திற்கு காரணமாயிருப்பது மாயாதத்துவம்.

♋ மேற்கூறிய தத்துவங்களின் வரிசை: மாயாத்துவத்தில் கலா,வித்தியா,காலம்,நியதி,அராகம் ஆகிய ஐந்தும் அடங்கும்; இவற்றினால் மறைக்கப்பட்டு[சுக துக்கங்களை] அனுபவிக்கும் ஆன்மாவிற்கு புமான் என்றும், மலமறைப்புள்ளதால் புருஷ தத்துவமென்றும் வழக்கு.[ஆனால்] ஆன்மா ஜடப்பொருளன்று. அராகம் முதல் கலாதத்துவமீறாக உள்ள ஐந்தும் மிசிராத்துவா என அழைக்கப்படுவன.

சுபம்

No comments:

Post a Comment