Monday, August 24, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 3


• உடலும் ஆன்மாவும்
(முக்கியமானது)

I. இந்த ஸம்ஸாரத்தில் ஜாதி மற்றும் குலம் முதலிய உணர்வுகளுக்கு இருப்பிடமாகிய இந்த பருவுடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும்[ஐம்பூதங்களின்] பிரிக்க முடியாத சேர்க்கை.

II. இங்கு முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிராமணர் முதலிய நால் வருணங்களில் பிறப்பும், புலன்களின் செயல்ப்பாடும், அழகும், செல்வமும் பொருந்தி குறிப்பிட்ட ஓர் அளவு ஆயுளும், குறிப்பிட்ட ஓர் அளவு இன்பதுன்ப நுகர்ச்சியும் கொண்டதாக ஆன்மா அமைகிறது.

III. இவ்வான்மாக்கள் இன்பதுன்ப நுகர்ச்சியடையும் பொருட்டு ஒவ்வொரு சிருஷ்டியிலும் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு புல் நுனியை விட்டு நீங்கி அந்தந்தப் பருவுடலைப் பற்றுவதும் பூதங்கள் முதல் கலாதத்துவம் ஈறான முப்பது தத்துவங்களடங்கியதுமான[சூக்ஷ்ம சரீரத்தைப்] பிரத்தியோகமாக ஒவ்வொரு பிறவியிலும் பெறுகின்கின்றன.

IV. அந்த ஆன்மாவினால் செய்யப்படும் புண்ணிய பாவங்களுக்கெல்லாம்[இந்த சூக்கும சரீரம் தான்] உறைவிடமாகும்.

V. ஆன்மாவானது பருவுடல், சூக்கும சரீரம் ஆகியவற்றினின்றும் தனித்து வேறுபட்டது; அறிவு மற்றும் செயல்திறன் கொண்டது; என்றும் நிலைத்து நிற்பது;உருவமற்றது; எங்கும் வியாபித்திருப்பது.

ஸம்ஸாரத்தில் உழலும் புருஷதத்துவமானது 
1. ஆணவம்,
2. கர்மம்,
3. மாயை,
4. பிந்து,
5. ரோதசக்தி 
என்னும் ஐவகையும் பாசங்களுக்குட்பட்டது.


சுபம்

Wednesday, August 19, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 2


சைவசித்தாந்தத்தில் இடம்பெறும் முக்கிய, அடிப்படை விடயம் இந்த பதிபசுபாசமென்னும் முப்பொருள்களும்.

1. பதி – பேரறிவுடைய சிவபெருமான்,
2. பசு – சிற்றறிவுடைய உயிர்,
3. பாசம் - உயிரைப் பிணிக்கும் கட்டு.

இனி தொடர்வோம்..
மெய்யறிவின்ப வடிவினனாகிய முழுமுதற் பரம்பொருள் ஒருவர் ஆவார். அவரே பதியாகிய சிவபெருமான். அவர் தமக்கென யாதொன்றும் வேண்டாதவர். அவர் பஞ்ச கிருத்தியங்களையுந்(ஐந்தொழில்கள்)தம் பொருட்டு செய்யவில்லை; ஆன்மாக்களுக்காக தனது சக்தியினாலே செய்தருளுகின்றார். இத்தன்மையால் இறைவன் அம்மையப்பர்(சிவமும் சக்தியும்)ஆவார்.
பஞ்ச கிருத்தியம்:

I. சிருஷ்டி-படைத்தல்

II. ஸ்திதி-காத்தல் 

III. சம்ஹார-அழித்தல்

IV. திரோபவ-மறைத்தல்

V. அனுக்கிரக-அருளல்

உயிர், என்றைக்குமுள்ள பொருள். அது புதிதாகப் பிறிதொன்றினின்று உண்டாக்கப்படுவதில்லை.ஆதலால்,
• படைத்தல், உயிர்க்கு உடம்பையும், மனமுதலிய உள்ளகக் கருவிகளையும், அது தங்குதற்குரிய உலகப்பகுதியையும், அது நுகர்தற்குரிய பொருள்களையும் தருவதேயாம். இதனை தனு கரண புவன போகங்கள் என்று கூறல் சாலப்பொருந்தும்.
தனு = உடம்பு.
கரணம் = மன முதலிய கருவி.
புவனம் = உடம்புக்கு ஆதாரமாகிய உலகம்.
போகம் = அநுபவிக்கப்படும் பொருள்.

• காத்தல்,உயிர் மேற்கூறியவைகளோடு பொருந்தி வேண்டிய காலம் வரை நிலவச் செய்தல்.

• அழித்தல், மேற்கூறியவற்றுள் ஒன்றோ பலவோ உயிரின் வேறாகப் பிரியும் வண்ணம் செய்தல்.

• மறைத்தல், நல்வினை தீவினைக்குரிய நுகர்ச்சிகளில் ஈடுபடச் செய்தல்.

• அருளல், பக்குவமடைந்த ஆன்மாக்களுக்குப்(பசுக்களுக்கு) பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதல்.

சுபம்

Monday, August 17, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 1

“சைவசித்தாந்த ஸாரம்” என்னும் தலைப்பில் அடியேன் சைவசித்தாந்த அடிப்படை விடயங்களை யாவரும் எளிதிலறியும் வண்ணம் சிறு சிறு பகுதிகளாகத் தர எண்ணியிருக்கிறேன். இதனை விளக்குமெனது தினமொவ்வொரு பதிவும் சைவசித்தாந்தம் பற்றியறியாதவர்களுக்கு ஒரு அடிப்படைத் தூண்டுகோலாக யிருக்குமென எண்ணுகிறேன். அவ்வகையில் இன்று சைவசித்தாந்த ஸாரத்தின் முதல் சிறு பதிவு இடம்பெறுகிறது..

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 1

உலகத்திலுள்ள பொருள்கள்
  1. அறிவுள்ளன
  2. அறிவில்லாதன என இருவகைப்படும்.

அறிவுள்ளன இயக்குவன,அறிவில்லாதன இயங்குவன. இவ்விரண்டையும் சித்து என்றும், சடம் என்றும் முறையே கூறுப.

அறிவுள்ளன யாவும் தாங்களாகவே பொருள்களை அறிவனவல்ல. தாமே யாவற்றையும் அறியும் கடவுள் ஒருவர் அறிவிக்க, அவை அறியும். அக் கடவுள் சிவபெருமான்.
  • அறிவுள்ளன உயிர்கள்
  • அறிவில்லாதன உலகம்



சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 1 முற்றிற்று.

சுபம்