ૐ
நிசும்பன், சும்பன் என்னும் நிசாசரிருவர்
தீமையை பொறாத தேவர்கள், பார்வதியாரை நோக்கிப் பலகாலஞ் தவஞ் செய்ய, இறைவி இமையவர்முன்
தோன்றி “அமரரே! நீங்கள் நினைக்கும் வண்ணமே அவர்களை அழிப்பேன்” என்றருளிச் செய்து
மலைச்சாரலையடைந்து தவவடிவேற்று வசித்திருக்கையில், சண்டன் முண்டன் என்னுந்
தானவரிருவர் சாம்பவியைச் சார்ந்து, “தார்குழலே! தனித்திருப்பானேன்; சாற்றற்கரிய
வலியுடைய சும்பனிடஞ் சேர்க்க” எனச் சொல்ல, அம்பிகை “அருந்தவமாற்றும் யான் ஆடவரோ டுரையாடேன்.
அரைக்கணத்தகலுமின்” என்று கூற, அவர்கள் சும்பாசுரன்பால் தேவியின் அழகை வியந்து
செப்பி, அவனேவலாற் சிலபடையுடன் மீட்டுஞ் சென்றழைத்து வராமை நோக்கி வலிதிற்
கைப்பற்றி ஈர்க்கக் கருதுகையில், விமலை வெகுளி கொள்ள, அம்மையார் தோளிலிருந்து
அநேகஞ் சேனையுடன் ஒரு சத்தியும் அவதரித்து, அவ்விருவரையுமஞ் சேனையுடன் சங்கரித்தனர்.
“சண்டனையும், முண்டனையுஞ் சங்கரித்ததால் சாமுண்டி எனப் பெயர் பெற்றுத் தரணியோர்
தொழ வாழுதி” என்று அச் சத்திக்கருளினர். அவற்றையறிந்த நிசும்பன்,சும்பன் என்போர்
அநேக அசுரருடன் ஆர்ப்பரித்து வந்து அம்மையை எதிர்த்து அஸ்த்திரமாரி சொரிய,
உமாதேவியார் தமதுடலினின்று சப்தமாதர்களையுஞ் சிவதூதியரையுஞ் உதிப்பித்து
யுத்தத்திற்கனுப்பி அவர்களால் அசுரச் சேனையை யழிப்பித்து, தாமே முதலில்
நிசும்பனையும் பிறகு சும்பனையும் மாய்த்தனர்.
ஆற்றலுடைய அவ்விரண்டு அசுரட்கு
இளையாளகிய குரோதி என்பவள் பெற்ற இரத்தபீசன் தனது உடல் இரத்தத்தில் ஒருதுளி தர்மேல்
விழுந்தால் அத்துளி தன்னைப்போலத் தானவனாக வரம் பெற்றவன். இச்செய்தியை அறிந்து
இமைப்பொழுதில் எதிர்த்தனன். அவனுடன் சப்தமாதர்கள் போர்செய்கையில், உதிரத்துளிகட்
கொவ்வோர் உருவேற்றது கண்டோடி வந்து உமையமையிடம் கூற, தேவியார் சினமிகத்
திருத்தோளினின்றுங் காளி தோன்றினள். “பெண்ணே ! யான் இரத்தபீசனை சங்கரிக்கையில்
உதிரத்துளி ஒன்றும் பூமியில் விழாமல் உன் கைகபாலத்தேந்தி உண்ணக்கடவாய்” என்று பணித்து,
அவளுதிர பானஞ் செய்துவர, இறைவி இரத்தபீசனை இமைப்பில் அளித்து, இமையவரை அவரவர்
நாட்டிற் கேக விசைத்து, காளியைக்களித்து அவளுக்குச் சண்டி என்று பெயரும்
தெய்வீகமும் சிவபெருமானிடம் நிருத்தஞ் செய்து அவர் பக்கலில் வசித்தலும்
ஆகியவிவற்றை அநுக்கிரகித்து, சப்தமாதர்களுக்கு அருள் செய்து அந்தர்த்தானமாயினார். காளி அசுரர் உதிரமருந்திய
ஆற்றலாலும், இறைவியாரிடம் பெற்ற வராததாலு மிறுமாந்து, துர் உணவுகளை புசித்து,
மோகினி-இடாகினி-பசாசு-பூதங்கள் புடைசூழ ஒருவனத்திலிருந்து மற்றொரு வனத்திற்கு போய்
உலக முழுவது முலவி வடாரண்யத் தருகில்வந்து யாவரையும் வாழ்ந்திருந்தனள்.
இஃதிவ்வாறிருக்க...
ஒருநாள் திருவாலங்காடு சென்ற
நாரதமுனிவருக்கு காளியின் தீச் செயல்களை கார்க்கோடக முனிவன் கூற, நாரதர் கேட்டுச்
செல்லுமளவில், காளி விழுங்கவர, அவர் மறைந்து விஷ்ணுவைக் கண்டு விஷயத்தைக் கூற.
திருமால் சிவபிரான்பால் திருவிண்ணப்பஞ் செய்ய. இறைவர் “இப்பொழுதே அக்காளியின்
வன்மை குன்ற வட வனமடைவோம்” என்று கூறி, சுநந்த,கார்க்கோடக முனிவர்க்குக் கருணைசெய்யக்
கருதி ஆலவனமடைந்தனர்.
மஹாதேவன் வயிரவ வடிவுகொள்ள, அவருடன்
வந்த பூதகணங்களுடன் காளியின் சேனை எதிர்த்து ஆற்றாது என காளியறிந்து, அவள்
அமர்க்கோலங்கொண்டுவந்து ஐயனைக்கண்டு பயந்து “நிருத்த யுத்தஞ் செய்வோம்” என
நிகழ்த்த. முன்னோனிசைந்து முஞ்சிகேசர், கார்க்கோடர்கட்குத் தரிசனந் தந்து திருநடனத்துக்குத்
தேவருடன் வந்தனர். அக்காலத்து அமரர் அவரவர்கட் கிசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர்.
அநவரதம்-அற்புதம்-இரௌத்திரம்-கருணை-குற்செய்-சாந்தம்-சிருங்காரம்-பயம்-பெருநகை-வீரிய
மென்னும் நவரசங்களும் அபிநயமும் விளங்க வாத்தியங்கட் கொப்ப பாண்டரங்கமாகிய சண்டதாண்டவத்தைக்
காளியுடன் செய்கையில், கருணாநிதியின் திருச்செவியில் இருந்த குண்டலமானது நிருத்த
வேகத்தால் நிலத்தில் நழுவ, அதை இறைவரே திருவடியொன்றினாலெடுத்துத் தரித்துத் திருத்தாண்டவஞ்செய்து
காளியைத் தோல்வியடையச் செய்தனர். அவள் செயலற்று நாணிப்பணிந்தனள். அருள் வள்ளல் “ஈண்டோர்
சத்தியாயிருத்தி” என அநுக்கிரகித்து இரு முனிவரும் எண்ணிலா சிவ அடியார்களும் தமது
தாண்டவ கோலத்தைச் சர்வகாலமுந் தரிசிக்கும்படி ஆண்டு வீற்றிருக்கின்றனர்.
திருவாலங்காட்டுப் புராணம்
“இன்சுவை
பொழியுஞ் சாய லபினய மிலங்கச் செவ்வாய்
புன்சிறு முறுவல்
பூப்பப் புணரவா னந்தம் பூரித்
தன்புறு
மவையோருள்ள மயர்தர வியங்கட் கேற்ப
வின்படு
நடனங்காளி யோடரன விளைத்த காலை
மடிதரு முலக
மென்ன வயங்கரு ணல்கி மெல்ல
அடிபெயர்ந்
தாடல் செய்ய அருகுறுங்காளி நோக்கி
ஒடிவுறு
நாணின் மேவி யொளிமுக மிறைஞ்சி யொல்கி
வடிவுறு
பாவைபோலச் செயலற மயங்கி நின்றாள்”.
சுபமஸ்து
No comments:
Post a Comment